செவ்வாய், 4 அக்டோபர், 2011

சிறுவர் பாடல்களில் படைப்பு நெறிகள் -4

"இந்திய அரசு, இந்திய மொழிகள் ஒவ்வொன்றிலும் வெளியாகும் குழந்தை நூல்களுக்குப் பரிசளிக்கும் திட்டத்தை ஏற்படுத்தி, 1955 ஆம் ஆண்டு முதல் பரிசுகள் வழங்கி வருகின்றது. முதல் முதலாகத் தமிழில் இப்பரிசைப் பெற்ற நூல், நா.கி.நாகராசன் எழுதிய 'ராமுவும் நானும்' என்ற அறிவியல் அற்புதங்களைக் கூறும் சிறுவர்களுக்கான அறிவியல் நூலாகும்.

சிறுவர்களுக்கான அறிவியல் நூல்களை எழுதி பல பரிசுகளை வென்றவர் கல்வி கோபால கிருஷ்ணன் ஆவார். இவர் பத்துக்கும் அதிகமானப் பரிசுகளைப் பெற்றுள்ளார். இவரது பறக்கும் பாப்பா, பண்டைய உலகில் பறக்கும் பாப்பா, பாதாள உலகில் பறக்கும் பாப்பா போன்ற சிறுவர்களுக்கான அறிவியல் நூல்களுள் குறிப்பிடத் தக்கவையாகும்.” (22)


ஒரு குறிப்பிட்ட பொருளை வைத்து எழுதாமல் பொதுவாகப் பல விஞ்ஞான உண்மைகளைக் கூறுகின்ற சிறுவர் நூல்களில் குறிப்பிடத்தக்கவை; பெ.நா.அப்புஸ்வாமி, எஸ். விஸ்வநாதன் எழுதிய 'விஞ்ஞானக் கதைகள்', பொ.திரிகூட சுந்தரத்தின் 'அம்மாவும் மகனும்', பி.வி.கிரியின், 'அறிவியல் கதம்பம்', நெ.சி.தெய்வசிகாமணியின் 'சிறுவர் விஞ்ஞானக் கதைகள்', தங்கமணியின் 'அறிவியல் சிறுகதைகள்', ர.சண்முகத்தின் 'வியப்பூட்டும் விஞ்ஞானம்', 'விஞ்ஞான உண்மைகள்', பூவை அமுதனின் 'அறிவியல் கருவிகள்' ,ஆ.கோவிந்தராசுலுவின் 'அறிவியல் பூக்கள்', 'வைரக்கற்கள்', 'ஹாலி'யிலே வானுலா', நெல்லை சு.முத்துவின் 'வானம் எனும் வீதியிலே' ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுள்ளும் அறிவியல் செய்திகளைப் பாடல் வடிவில் படைப்பது அரிது

“மணலை விடவும் பலகோடி
மடங்கு சிறிது அணுவாகும்
ஊசி முனையின் சதகோடி
உருவம் சிறுத்தது அணுவாகும்!
புரோட்டான் நியூட்ரான் இவ்விரண்டும்
அணுவின் உட்கரு கொண்டனவாம்
அதனை ஏதும் அணுகாமல்
சுற்றி வருவது எலக்ட்ரானாம்
ஒரு வகை அணுக்கள் பலகோடி
ஒன்றாய்ச் சேர்ந்தது பொருளாகும்!
உலகில் உள்ள‌ பொருளெல்லாம்
அணுக்கள் சேர்ந்தே ஆனவையாம்!” (23.)

அறிவியலை விரும்பிப் படிக்கும் வகையில் கவிதையில் சொல்ல முடியும் என்பதை இப்பாடல் காட்டுகிறது. இத்தகைய பாடலை ஓரளவு வளர்ந்த குழந்தைகளே புரிந்து கொள்ளமுடியும். சிறுவர் பாடல்கள் படைப்போர் எந்தக் கருத்தை, எந்த வயதினருக்கு, எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதைக் கொண்டே அதற்கேற்றவாறு எழுதுகின்றனர்.

சிறுவர் பாடல்களில் பின்பற்றப்படுகின்ற இலக்கணங்கள் குறித்து வெ.தனலக்குமி, தன் ஆய்வில் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.
“1. ஓசை நயத்தை முதன்மை நோக்கமாகக் கொண்டு வல்லெழுத்து வண்ணம், மெல்லெழுத்து வண்ணம், இடையெழுத்து வண்ணம், ஆகியவற்றைப் போற்றியுள்ளனர்.
(எ‍ - டு) "பட்டுப் பட்டு
பட்டு வாயில் பிட்டு"
2. நாட்டுப் பாடல் சந்தங்கள் கவிஞர்கள் தம் தனித்தன்மையைப் பாதிக்காத வகையில் மிக அளவாகப் பயன்படுத்தப் பட்டுள்ளன.
(எ‍ - டு) "சுண்டெலி ராசனுக்குக் கலியாணமாம்
சோளத் தட்டுப் பல்லக்கு ஊர்வலமாம்"
3. பெயரடைகள், பண்படைகள், பெயரெச்ச அடைகள், வினையெச்ச அடைகள் ஆகியவற்றைப் பொருள் புலப்பாடு கருதி எடுத்தாண்டுள்ளனர். இயற்கைப் பொருட்கள் பற்றிய பாடல்களில் அடைகள் மிகுதியும் இடம் பெறுகின்றன.
(எ‍ - டு) காட்டுத் திணைக் கதிர், சேலத்து மாம்பழம், சோலைமலர்
4. பண்படைகளைக் கவிஞர்கள் மிகுதியாகக் கையாண்டுள்ளனர். இவற்றுள்ளும் அளவு பற்றி வரும் பண்படைகள் மிகுதியாகப் போற்றப்பட்டுள்ளன.
(எ‍ - டு) சின்ன வால், குள்ள வாத்து, குட்டிநிலா, வட்டமான தட்டு
5. வினையெச்ச அடைகள் மிகக் குறைவாக இடம் பெறுகின்றன.
(எ‍ - டு) பையக் கொறிக்கிறாள், மெல்ல அசையுது, பாய்ந்து தாவுது, அசைந்து நடக்குது
6. சொல், தொடர் ஆகியன அடுக்கிவரத் தொடுக்கும் உத்தியைக் கவிஞர்கள் சிறப்பாகக் கையாண்டுள்ள‌னர். இவற்றுள் பெயர்ச்சொற்களையும் வினையெச்சச் சொற்களையும் அடுக்கிவரத் தொடுத்தல் மிகுதியாகும்..
(எ‍ - டு)."பூனையாரே! பூனையாரே!
நத்தையாரே! நத்தையாரே!
பசுவே! பசுவே!
'பனைமரமே! பனைமரமே!"
7. உவமை அணி, பொருள்விளக்கம், அழகுணர்வூட்டல், ஆகிய நோக்கங்களுக்கு மிகுதியும் பயன்பட்டுள்ளது. உயிரினங்கள், இயற்கைப் பொருள்கள், செயற்கைப் பொருள்கள், மக்கள் ஆகியன பற்றிய உவமைகளைக் கவிஞர்கள் எடுத்தாண்டுள்ளனர். மக்களின் பண்பை உணர்த்தும் நோக்கில் இயற்கைப் பொருள்களை உவமையாக்கிப் பாடுதல் பெருவழக்காக உள்ளது.
(எ‍ - டு) ‘ஆமை போல அடங்கிடாதே தம்பி,
“வாழையைப் போலவே நீ ‍ எல்லா
வகையிலும் உதவிடுவாய்'
8. உருவக அணி ஏற்ற இடங்களில் இடம் பெற்றுப் பாடல்களுக்கு அழகூட்டுகிறது.
(எ‍ - டு) "மீனினம் ஓடிப் பறக்குதம்மா ஊடே
வெள்ளி ஓடமொன்று செல்லுதம்மா"
9. குழந்தைகள் சுவைத்து இன்புறத்தக்க இயைபுக் கற்பனை, கருத்து விளக்கக் கற்பனை, குழந்தைகளின் வேடிக்கை உணர்வின் வெளிப்பாடாக அமையும் இயல்பு கற்பனை ஆகியனவும் பாடல்களில் இடம் பெற்று கவிஞர்களின் கற்பனை ஆற்றலைக் கோடிட்டுக் காட்டுகின்றன".
(எ‍ - டு) "வானத்திலே வெள்ளித் தட்டு
வந்து பாரம்மா வெளியே
வந்து பாரம்மா" (24)
என்று குழந்தைப் பாடல்களின் பின்பற்றப்பட்டுள்ள‌ இலக்கணங்களைப் பட்டியலிட்டுள்ளார்.

இங்கு எடுத்துக்காட்டியுள்ள பாடல் வகைப்பாடுகளைக் கொண்டு
1.சந்தம், ஓசை நயத்திற்கும் பழகு தமிழ்ச் சொற்களுக்கும் முதன்மை வழங்கி எளிமையான நடையில் பாடல்கள் இடம்பெறுதல்.
2. பாடுபொருளுக்கேற்ப ஒலிக் குறிப்புச் சொற்களைப் பயன்படுத்தி, பொருள் புலப்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்தல்.
3. கொச்சைச் சொற்கள், பிற மொழிச் சொற்களை நீக்கிப் பாடல்களை வழங்குதல் (இச்சொற்கள் அரிதாக ஒரு சில பாடல்களில் இடம் பெற்றுள்ளன)
4. சொல்நயத்தை முதன்மையாகக் கொண்டு குழந்தைகள் தலை அசைத்து, கை தட்டி இரசித்துப் பாடும் வகையில் இனிமையாகப் பாடல்களை வழங்குதல்.
5. வினாவிடை முறைகள், புதிர் முறை, விடுகதைகள் முறையிலும், பாடல்களில் வழங்கும் உத்திகளை இயல்பாகக் கையாளுதல்
ஆகியன சிறுவர்களுக்கானப் பாடல் நெறிகளைக் குறிப்பிட்டுக் கூறலாம்.

"குழந்தைகள் தாமே பாடி மகிழ்வனவாகும், குழந்தைகள் விரும்பும் பொருள்களை காட்சிகளை விளையாட்டுகளைப் பற்றியனவாகவும், குழந்தைகள் வயதுக்கும் அறிவுக்கும் ஏற்ற சொற்களையும், கருத்துக்களையும், சந்தங்களையும், பெற்றனவாகவும் அமைந்தன... குழந்தைகளுக்காக குழந்தை உள்ளத்தோடு, குழந்தையின் மொழியில் குழந்தை உலகத்தை விளக்கும் பாடல்களே உண்மைக் குழந்தைப் பாடல் என்பது நான் கொடுக்கும் விடையாகும்."(25) என்று பூவண்ணன் கூறுகிறார். ஒரு படைப்பாளி வழங்கியுள்ள இவ்விலக்கண நெறிமுறைகளே பொருத்தமானதாகக் கொள்ளலாம்.



குறிப்புகள்

1. புரியாத புதிர், ஆ.கோவிந்தராசலு, அம்சா பதிப்பகம், கரிக்காலாம்பாக்கம், புதுவை,
பதி, 01.06.2002, அணிந்துரை, ப.2.
2. குழந்தை இலக்கிய வரலாறு, பூவண்ணன், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, பக்.62
3.மூன்றாம் வகுப்பு, தமிழ், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 2009, ப.1
4. பாடுவோம் அறிவியல், சிறுவர்கள் அறிவியல் பாடல்கள், குழ.கதிரேசன், பூங்குழல் வெளியீடு, சென்னை, 1998.
5. கிள்ளைப் பாடல்கள், புதுமைப் பித்தன், அம்மன் புக் கம்பெனி, சென்னை 1996, ப.15
6.குழந்தைத் தெய்வங்கள், ந.தி.சுப்பிரமணியன், சூர்யா பதிப்பகம், திருவள்ளூர், 1998, ப.30
7. மூன்றாம் வகுப்பு, தமிழ், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 2009, ப.61
8. குழந்தைக் கவிஞரின் இலக்கியத் திறன், வெ.கிருட்டினசாமி, மாணிக்கவாசகர் நூலகம், சிதம்பரம், 1981, ஆக.15
9. குழந்தைப் பாடல்களில் பாடுபொருளும், பாடு நெறியும், வெ.தனலக்குமி, மங்கை வெளியீடு, சென்னை-18, டிச.1990, ப.80
10. வளரும் பூக்கள், செல்லகணபதி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை 14, டிச.2008. ப.14.
11. மூன்றாம் வகுப்பு, தமிழ், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 2009, ப.64
12. மலரும் உள்ளம், அழ.வள்ளியப்பா, , குழந்தைப் புத்தக நிலையம், சென்னை, 1967, ப.42
13.குழந்தைப் பாடல்களில் பாடுபொருளும், பாடு நெறியும், வெ.தனலக்குமி, மங்கை வெளியீடு, சென்னை-18, டிச.1990, ப.371
14. மலரும் உள்ளம், அழ.வள்ளியப்பா, ப.4, குழந்தைப் புத்தக நிலையம்,மூன்றாம் பதிப்பு, சென்னை, 1974
15. எலி கடித்த பூனை, குழ.கதிரேசன், ஐந்திணைப் பதிப்பகம், சென்னை, 2002, ப.25
16.சிறுவர் பாட்டு, நரா.நாச்சியப்பன், அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை 41, மூன்றாம் பதிப்பு, 1999, ப.40.
17. குழந்தைக் கவிஞரின் இலக்கியத் திறன், வெ.கிருட்டினசாமி, மாணிக்கவாசகர் நூலகம், சிதம்பரம், 1981, ஆக.15, ப.41
18.மேற்படி நூல்
19. மலரும் உள்ளம், அழ.வள்ளியப்பா, ப.42, குழந்தைப் புத்தக நிலையம், சென்னை, தொகுப்பு -1, ப.3.
20. பேசும் கிளியே, குழ.கதிரேசன், பக்.14.
21. குழந்தைக் கவிஞரின் இலக்கியத் திறன், வெ.கிருட்டினசாமி, மாணிக்கவாசகர் நூலகம், சிதம்பரம், 1981, ஆக.15, ப.41
22. நெல்லை சு.முத்துவின் சிறுவர் இலக்கியப் படைப்புகள், ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு, க.பகலவன், 2009 10, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், ப.25
23.அறிவியற் பூக்கள், ஆ.கோவிந்தராசலூ, அம்சா பதிப்ப்கம், கரிக்கலாம்பாக்கம், புதுவை, பதி, ஜூலை, 1995, ப.4
24. குழந்தைப் பாடல்களில் பாடுபொருளும், பாடு நெறியும், வெ.தனலக்குமி, மங்கை வெளியீடு, சென்னை-18, டிச.1990, ப.358-59.
25. குழந்தைக் கவிஞரின் இலக்கியத் திறன், வெ.கிருட்டினசாமி, மாணிக்கவாசகர் நூலகம், சிதம்பரம், 1981, ப.15

2 கருத்துகள்:

  1. இன்று தான் தங்கள் பதிவுக்கு முதல் முதலாக வருகை தருகிறேன்...

    முனைவர் என்றதும் தாங்கள் தமிழ்த்துறை சார்ந்தவரோ என்று தேடி வந்தேன்..

    தங்களைப் பற்றிய பணிவிவரங்கள் காணவில்லையே..

    சிறு குறிப்பு இருந்தால் தங்களைப் பற்றியும் தங்களுக்கு விருப்பமான துறை பற்றியும் நாங்கள் அறிந்துகொள்ள முடியுமே..

    என் வலைப்பக்கத்தைத் தாங்கள் அறிவீர்களா?

    http://gunathamizh.blogspot.com/

    பதிலளிநீக்கு